03 October 2011
தண்டனை
இச்சைகள் அடக்கியறியா உடல்
வக்கிரங்கள் வார்த்தெடுத்த மதி
உடலுக்கும் மதிக்கும் உவப்பளிக்க
தற்காலிகமாய் ஒளிந்து கொண்ட மனசாட்சி
ஈசன் மறைந்து நீசன் தோன்ற
இத்தனை போதாதா???
கண்ணை கட்டி ஆடிய வெறியாட்டம்
பல வாளி தண்ணீர் துளிகளால்
உடல் கழுவிய பின்னும்
வேதனைகளை வில்லாக்கி
வினாக்களில் நாணேற்றி ஏவிய
ஒரு காய்ந்த கண்ணீர் துளி அம்பு
உருகி உருளும் அருவமான
மெழுகு துளிகளாகி உஷ்ணம் மாறாமல்
உடல் வருத்தியது...
நீயல்ல என சாட்சியங்களும்
சந்தர்ப்பம் என சட்டமும்
பொய்யை மெய்யாய்
சான்றழிக்க
அசரீரியாய் ஒலித்த உண்மை மட்டும்
மனதை சல்லடைகளாக்கி
மனிதத்தை உலுக்கியது...
செங்குருதி வற்றி
அமிலத்தில் இதயம் துடிப்பது போல்
நெஞ்செரித்தது..
அஃறிணை உதாரணம் நீ என
கண்ணாடியில் தோன்றி விம்பமே
காறி உமிழ்ந்தது..
ஆசை கோபம் ஓய்ந்து
உறங்கும் மனிதம் விழிக்கையில்
சில தவறுகளின் தண்டனைகள்
இரு முனை கூர் கொண்ட ஆயுதத்தால்
ஒரே தடவையில் வருத்துவது போல
பலர் அறியாதது
ஆனால் வலி மிகுந்தது.
+++++++++++++++++
Subscribe to:
Posts (Atom)