24 February 2010

காணாமல்..


மாலை நேர வானம்
சில துண்டு மேகங்கள்
ஒற்றையாய் நான்
காட்சி துறந்து இமை கவிழ்த்து…..
காதலுடன் காத்திருப்பு…
வருகிறாய்…
தகவல் சுமந்தது மல்லிகைச் சுகந்தம்…
விழி விரிப்பதற்குள்
உடல் முதல் உள்ளம் வரை
சில்லிட தழுவினாய்…
தினமும் தீண்டியும்
முதல் தீண்டல் போல உருகி நின்றேன்…
உச்சி கூந்தல் சுருளை கலைத்து
ரசித்தாயோ???
ஒதுக்க முயல சிரித்தாய்
மீண்டும் மீண்டும் இப்படி ஒரு வம்புனக்கு…
செல்ல கோபம் நான் கொண்டேன்
என் கோப சுவர்களை தகர்க்க
மேலாடையில் உன் கவனம் செல்ல
சினம் தகர்ந்து
பெண்மையின் நாண சுவர் நான் எழுப்பினேன்
கையது கொண்டு மெய்யது மூடி…
நின் ரகசிய சிரிப்பு என் செவிகளுக்குள்…
சிந்தை மயங்க விழி திறந்தேன்…
விழிகளுக்குள் சிறைப்படுத்த முடியவில்லை
விளங்காத ஒரு வருடலுடன்
விலகிப் போனாய் தென்றல் காற்றே…