30 December 2009

வருவாயா??


ஏதோ ஒரு சாலையிலோ
எங்கோ ஒரு சோலையிலோ
அலைகரையிலோ
பனி இருட்டிலோ
பள்ளியுடையிலோ
பேருந்து பயணத்திலோ
மின்னல் மழை நாளிலோ
கடை தெருவிலோ
சந்தித்தும் சிந்திக்காத
சந்திக்காமலே தொலைந்த
பார்த்தும் பாராத
பார்வை சிறைக்குள் சிக்காத
யாரோ ஒரு நானும் யாரோ ஒரு நீயும்
ஏதோ ஒரு நாளில் நாமாவோம்..
ஆனால் யார் நீ???
கைகோர்த்து உடன் வருவாயா?
கடல் வானம் வானவில் புல்வெளி அத்தனையும்
தோள் சாய்ந்து ரசிக்க வருவாயா?
நீள் வானம் பார்த்து,
மெல்லிசை செவி கொள்ள வருவாயா?
என் தனிமை கூட்டுக்குள் கனவாக வருவாயா?
நிலா இழந்த வானில் நிற்காத மழை துளியில்
துள்ளி நான் நனைய துணை வருவாயா?
கடிகார வீட்டுக்குள் காதல் மையத்தில்
விரல் சேர்ந்து வினாடி நேரம் கூட
பிரியாத சிறை செய்ய வருவாயா?
நீ நான் என்ற பேதத்துக்குள்
செல்ல விவாதங்கள் சலிக்காமல் நான் கொள்ள
ஊடலாகி ஒரு முத்தம் சுமந்து வருவாயா?
எது வரை என்றறியாத ஆயுளின்
எல்லை வரை என் இதயமும்
உன் இதயமும் இணைந்து துடிக்க
ஒரு விஞ்ஞான மாற்றம் செய்ய வருவாயா?
நேசத்துக்குள் கவிதை நான் சொல்ல
கேசம் நீவி ஒரு கவிதையாக
காதல் செய்ய வருவாயா?
சிட்டு குருவிகளின் சிறகுகளில்
என் நெஞ்சம் வானம் அளக்க
வண்ணச்சிறகுகளாக வருவாயா?
வெண்ணிலவில் கங்குலில்
பாதையில் பயணங்களில்
ஆதிகளில் அந்தங்களில்
தேவைகளில் ஆசைகளில்
என் அத்தனை நொடியிலும்
பங்கு கொள்ள
உன் அத்தனை நொடியிலும் பங்கெடுக்க
காத்திருக்கிறேன்…வருவாயா?
என் விழி நீரில் ஒரு முத்துக்கு சொந்தமாக
என் புன்னகையில் ஒரு அங்கமாக
பூத்திருக்க வருவாயா?
விடை தெரியாத வினாவாக நீ
விடை தேடும் வினாவாக நான்
மொட்டவிழ்ந்த வினாக்களோடு
தனித்திருக்கிறேன்…
வருவாயா??