24 December 2009

மழை


பொன் மஞ்சள் வானம்
பூமிக்கு தன் காதல் சொல்ல
காலம் கனிய கண்டு
கருவண்ணம் பூசிக் கொள்ள
வெண் மேக குவியல் எல்லாம்
சிறகடித்து உடலொழித்து கொண்டன
வெட்கத்தில்
கதிரவனும் கதவடைத்து கொள்ள
சிந்திய கதிர்களில் ஒன்றிரண்டு
வானவில் கோலமிட்டு
காதலின் வருகையை தந்தியடித்ததோ
ஐநிலத்துக்கும்
சினத்தில் விழிதுடித்து மின்னல் கீற்றொன்று
துள்ளி மறைந்தது
கங்கண பேரொலி வான் திறந்தது
நானே சொல்லி கொள்வேன்
என் காதலை என்று தானோ…
கடலவன் பொங்கி சிரித்தான்
இந்த காதல் விளையாட்டு கண்டு
நாணல்கள் முகம் மலர்த்தின
ஆவலை அடக்க முடியாமல்
புள்ளினங்கள் கதவடைத்து
ஒளிந்திருந்து உளவறிந்தன
தோகை விரித்த நீல மயில்
சேதி சொல்ல நடமாடியது
விவசாயி விழி நீர் துடைத்தான்
தன் சின்ன மகள் மனம் மகிழ்வாள் என்று

உச்சி வானம் தொட்ட சின்ன துளி நீர்
தன் முதல் முத்தம் சுமந்து
நிலம் நாடி வர
குறும்பு மிக்க தென்றல் வீசி
அந்த முதல் முத்தத்தை
பூவிதழுக்கு பரிசளித்து சிரித்தது
தென்றலின் வம்பினால் கொதித்து
பல்லாயிரம் முத்தங்களை
அள்ளி தெளித்து தன் வீரம் காட்ட
அசட்டு தனமாக இடித்து உலகெழுப்பி கொண்டான்
விண்ணவன்.
பூமகள் புன்னகைத்து கொண்டு
தன்னை நாடி சிந்திய முத்தங்களையெல்லாம்
அள்ளி கொண்டு
தென்றலுக்கு தன் வெற்றி சொன்னாள்
தலை குனிந்து சுமந்து சென்றது தென்றல்
பூமகள் வெற்றியை மண்வாசனையாய்..
மணி கணக்காய் இதமாக
மனம் பரிமாறி கொண்டனர்
விண்காதலனும் மண் காதலியும்
எப்போதாவது இணைப்பு கொடுக்கும்
மழை தொலை பேசி சேவையில்…

ஒதுக்கம்



வெறுமை தாழ் கொண்டு
தனிமை சிறைக்குள் பூட்டி கொண்ட
சூழ்நிலை கைதி அவள்
கண்மை கொண்ட கண்களுக்குள்
பெண்மையின் அருவி அவள்
கனா இழந்த விடியல்கள் அவள்
கண்ணீர் இழந்த விழிகள் அவள்
வரண்ட புன்னகை இழந்த இதழ்கள் அவள்
ஆரவாரமில்லாத அமைதி அவள்
சொல்லிழந்த கவி அவள்
இசையிழந்த மௌனம் அவள்
ஆசைகள் இழந்த ஆகுதி அவள்
சுவர் கண்ணாடியில் தனித்து சிரித்து பார்க்கும்
விசித்திரம் அவள்
குழாயில் சிதறும் நீருடன் கதறி பார்த்தும்
கண்ணில் நீர் கோர்க்காத பரிதாபம் அவள்
புள்ளினம் கூட ரகசியம் பேசும் அதிசயம் அவள்
மின்னல் மழையின் பள்ளித் தோழி அவள்
வெள்ளி நிலவின் புன்னகை வெளிச்சம் அவள்
காட்டு பாதையில் வீட்டு ரோஜா அவள்
புல்லாங்குழலின் மெல்லிசை மோகனம் அவள்
ஒற்றையாகி போன அன்றில் பறவை அவள்
விளக்கினை நாடாத விட்டில் விசித்திரம் அவள்
கடினமான வாழ்க்கை விடுகதையின்
இலகுவான பதில் அவள்
அவசர உலகில் இருந்து
வலியின்றி ஒலியின்றி
அழகாக ஒதுங்கி கொண்டதால்…..