19 December 2009

காதலித்து பார்த்தேன்


காதலித்து பார்த்தேன்
அஸ்தமனங்கள் கசத்தன
பிரிய வேண்டுமே என்ற தவிப்பில்
விடியல்கள் இனித்தன
சந்திப்புகளின் புத்துணர்ச்சியில்
கண்ணாடிக்கு கண் வலித்தது
அழகு பார்த்த மணி நேரங்கள் அதிகரித்ததால்
தொலைபேசிக்கு செவி வலித்தது
மீண்டும் மீண்டும் பரிமாறிய அதே காதல் வார்த்தைகளால்
தலையணைக்கு கழுத்து வலித்தது
கட்டியணைத்த வேகங்களை தாங்க முடியாமல்
மழைதூறலாய் மலர்சாலையாய்
உனக்குள் என்னை ஆயுள் கைதியாக்கி கொண்டேன்
எதிர்காலம் இனித்தது இன்ப கனவுகளில்
கூட்டங்களும் கூச்சல்களும் கசத்தன
தனிமை பிடித்தது
தனிமையில் புன்னகைக்க பிடித்தது
பூக்கள் பிடித்தது
பனித்துளி பிடித்தது
மொத்தத்தில் பைத்தியம் பிடித்தது
காலச்சக்கரத்தில் காட்சிகள் புதைந்தன…
ஊமைக்கனவுக்கும் முடிவு வந்தது

வண்ண நிலவின் தவங்கள்
வனாந்தரங்களிலும் பாலை நிலங்களிலும்
ஒளி பொழிவது போல்
மாட மாடங்களிலும் பூக்களின் சோலையிலும்
ஒளி பொழிவது இயற்கை…
ஒரு பூவில் தேன் கண்ட வண்ணத்து பூச்சி
அடுத்த மலர் தாவுவதும் இயற்கை
இயற்கையை தவறு சொல்ல இயலாததால்
இதுவரை நேசித்த அத்தனையுடனும்
என்னையும் சேர்த்து வெறுக்கிறேன்
தண்டனையாய்
ஆனால் அடி மனதின் உள்ளிருட்டில்
உண்மை கண்டேன்..
எங்கு தோற்றேன் என்று தெரியாமல்
ஏன் தோற்றேன் என்று அறியாமல்
பிரிவுடன் மரத்து போனது
இதயம் மட்டும் அல்ல அத்தனை
புலன்களும் என்று
விழிகள் திறந்த விடியல்கள் புரியாமல்
இருட்டுக்குள்ளே
அடையாளமாய் நானும்
காதலித்து பார்த்தேன்

மணப்பெண் 2


மொட்டுக்குள் ஒளிந்திருந்த நறுமணம்
இதழ் விரிக்கும் பூவிற்கு அடையாளம்
தரிசு நிலத்தில் தோன்றும் மண் வாசம்
நிலம் தீண்டிய மழைத்துளிக்கு அடையாளம்
தனிமையான தருணங்களில் கூட
என் கன்னத்தில் தோன்றும் புன்னகை குழி
மனதின் மையத்தில் மையமிட்டிருந்த காதலின் அடையாளம்

அன்று என்னருகே கல்லென இருந்த கணவனில்
இன்று கிழக்கில் தோன்றும் சூரியனை போல
சாசுவதமான காதல்
ஆழத் தூங்குகையில் ஆதரவான ஒரு கரம்
அணைத்து கொண்டிருந்தால் காதல் தோன்றுமோ?
வயல் வெளி பாதைகளில் குடை துறந்து
மழைப்போர்வை போர்த்து கொள்ள துணை வந்தால் காதல் தோன்றுமோ?
மொட்டை மாடி நிலவில் தோளணைத்து
தன் தோல்வியடந்த காதலை சொன்னால் காதல் தோன்றுமோ?
கால் தழுவி செல்லும் அலைகளுடன்
நடந்து செல்கையில் விரல் கோர்த்து கொண்டால் காதல் தோன்றுமோ?
என்னை அறியாமல் ஏதோ ஒரு அற்புதமான நொடியில்
பூத்தது இளம் காதல்..
தளைகள் உடைந்தன..
இருளாக தோன்றிய எதிர்காலம்
மூன்றெழுத்து சாதாரணமான வார்த்தைக்குள்
என்னவனுடன் இணைந்து விட்டதால்
ஒவ்வொரு விடியலும் அழகாக தெரிந்தது.
மனைவி, மருமகள், அண்ணி என மருட்டிய
விதிமுறைகள் காதலி, மகள், சகோதரி
என உரிமை நிறைந்த புது உறவுகளுக்குள்
கை கோர்த்து கொண்டன.
கன்னத்தில் முத்தமிட்டு கையசைத்த
கணவனின் விழியுயர்த்தி பார்க்கையில்
இன்றும் கரித்தது
ஆனந்தத்தில்.